Thursday, August 18, 2011

பருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)


அறிமுகம்:
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்வது இன்றியமையாததாகும். இதில் நாம் அன்றாடம் உணவு பொருள் தயாரிக்க பயன்படுத்துவதில் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் எண்ணையானது கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்து பயிர்களிலிருந்து பெறப்பட்டவையே ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பதால் பருத்தி பயிரிலிருந்து  பெறப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட (Refined) எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான எண்ணை தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகைய பருத்தி எண்ணையை பல வருடங்களுக்கு முன்பிருந்தே அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் சமையல் எண்ணைகளுக்கு இணையாக பருத்தி எண்ணையை பயன்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்களாலும், உணவியல் துறை வல்லுனர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டு தற்பொழுது பருத்தி எண்ணைய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  
பருத்தி எண்ணெய் (Cotton Seed Oil):
"வெள்ளைத் தங்கம்" (White gold) என்றழைக்கப்படும் பருத்தி பயிரானது இதற்கு முன்பு பருத்தி  இழைக்காக  மட்டும் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பருத்தி விதையிலிருந்து  பெறப்பட்ட சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யானது சமையலுக்கு பயன்படுத்தப்படுவதால் பணப்பயிரான பருத்தியின் முக்கியத்துவம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது.

பொதுவாக பருத்தி விதையிலிருந்து 15-25 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கிறது. பருத்தி எண்ணெயில் மனிதனுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கலான பால்மிடிக், ஸ்டியரிக், ஒலியிக் மற்றும் லினோலெயிக் போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது.  பருத்தி எண்ணெயில் கொலஸ்டிரால் இல்லாததால் இது "இதய எண்ணெய்" (Heart oil) என்றும் அழைக்கப்படுகிறது.

பருத்தி எண்ணெயில்  அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்களின் அளவுகள்:
பருத்தி எண்ணெயில்  70 சதவிகிதம் நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated fatty acids) அடங்கியுள்ளது. இதில் 18 சதவிகிதம் ஒற்றை நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலம் மற்றும் 52 சதவிகிதம் பல நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated fatty acids)   உள்ளடக்கியதே ஆகும். மேலும்பருத்தி எண்ணெயில் 26 சதவிகிதம் நிறைவு செய்த (அ) பூரித்த (Saturated) பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள் அடங்கியுள்ளது.

 பருத்தி எண்ணெயின் பயன்கள் - (Uses of Cotton Seed Oil )

§  பருத்தி எண்ணெயில் அதிக அளவு வனஸ்பதி மற்றும் டால்டா தயாரிப்பதிலும் மற்றும் 5-10 சதவிகித பருத்தி எண்ணைய் சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
§  சுத்திகரிப்பு செய்த (Refined) பருத்தி எண்ணெயானது நல்ல வாசனையாக உள்ளதுடன், இது உணவின் வாசணையை குறைப்பதில்லை. 
§  பண்படாத (Crude) பருத்தி எண்ணெயானது இயந்திரங்களுக்கு உயவுப் பொருளாக (Lubrication) பயன்படுகிறது. 
§    பருத்தி எண்ணெயில் வைட்டமின் "ஈ" (Vitamin E) அதிக அளவில் உள்ளது. 
§  பருத்தி எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். 
§  இரத்த தந்துகிகளின் (Blood vessels) சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமான லினோலெயிக் (Linoleic) என்ற கொழுப்பு அமிலமானது பருத்தி எண்ணெயில் அதிகமாக இருப்பதால் இது இதய நோயை குறைக்க இயலும். எனவே, இந்த எண்ணெயானது அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சிறந்த எண்ணையாக பரிந்துரை செய்யப்படுகிறது. 
§  பருத்தி எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் "அசிட்டோ கிளிசரைடு" என்ற வேதிப்பொருளானது வெளிநாடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

நன்றி: நான், என்னுடைய முதுநிலை வேளாண்மை பட்டய படிப்பின்போது பருத்தி விதையில் எண்ணையின் அளவை மரபியல் நுட்பம் மூலம் அதிகரிப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். மேலும் என்னுடைய ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இந்த கட்டுரையை அன்னை தமிழில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர்இனப்பெருக்கம் மற்றும் மரபியல் (Plant Breeding and Genetics) துறை பேராசிரியர்களான முனைவர் இரா. இரவிகேசவன், முனைவர் அ. இராமலிங்கம்  மற்றும் முனைவர் ந. சிவசாமி  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம்! அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்!

Saturday, August 13, 2011

மனித மரம் - (சிறுகதை)


கோவை மாவட்டத்தில் வேட்டைக்காரன் புதூர் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அக்கிராமத்தில் கோவிந்தன் என்ற விவசாயி வாழ்ந்து  வந்தார். இவருக்கு மிகச்சிறிதளவே நிலம் இருந்ததால் கூலி வேலை செய்துபிழைத்து  வந்தார். கோவிந்தனுக்கு இரு மகள்கள். மூத்த மகள் ஆனந்தி 12 ஆம் வகுப்பும், இளைய மகள் ஆர்த்தி 9 ஆம் வகுப்பும் அவ்வூர் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

அன்று  ஒரு நாள் சனிக்கிழமை காலையில்  ஏம்மா ஆனந்தி எழுந்திரிம்மா. உனக்கு அரசு பொது தேர்வுக்கு இன்னும் மூனு மாதம் தான்மா இருக்கு, நீ இனி தினமும் நன்றாக படித்தால் கண்டிப்பாக உனக்கு ஏதாவது அரசு தொழிற்கல்வி கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கூறிவிட்டு கூலி வேலைக்கு கிளம்பி சென்று விட்டார். ஆனந்தியும் அப்பா சொன்னமாதிரியே தினமும் நன்றாக படித்தாள்.

நாட்கள் வேகமாக  சென்றது. ஆனந்தியின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் முடிந்தது. ஏம்மா ஆனந்தி பொதுத் தேர்வெல்லாம் நல்லா எழுதியிருக்கியாம்மா? தொழிற்கல்வி பயில‌ அரசு கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்று கேட்டார் ஆனந்தியின் அப்பா கோவிந்தன்.

ஆம், கண்டிப்பா  கிடைக்கும் அப்பா என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றாள். தான் ஏழையாக‌ இருந்தாலும் தன் மகளை எப்படியாவது கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கனும் என்று உறுதியாக இருந்தார் கோவிந்தன்.

பொதுத்தேர்வு முடிவில் ஆனந்தியும் நல்ல மதிப்பெண் பெற்று தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளநிலை வேளாண்மை படிக்க இடமும் கிடைத்தது.

ஆனால் அக்கல்லூரியில் முதலாமாண்டு கல்விக்கட்டணமாய் ரூ 10 ஆயிரமும் விடுதிக்கட்டணம் ரூ 2500 ம் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டினால் தான் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம் என்றது கல்லூரி நிர்வாகம்.

அரசு கல்லூரியிலே இவ்வளவு பணம் கட்டணுமா? என்று பல கேள்விகளை தன் மனசுக்குள்ளே கேட்டுக்கொண்டு ஊருக்கு சென்றார் தன் மகளோடு.

ஊரில் பல நபர்களிடம் கடன் கேட்டு பார்த்தார். யாரும் அவரின் அவசரத்திற்கு உதவிசெய்ய முன் வரவில்லை. சோகத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஆனந்தி தன் அப்பாவிடம் பணம்கிடைச்சுதா அப்பா? இன்னும் ஒருவாரத்திற்குள் பணத்தை கட்டியாகனும் அப்பா என்றாள். இல்லம்மா, இன்னும் பணம் கிடைக்கல என்றார்  கண்ணீர் மல்க!

தன் வீட்டிற்கு முன்பிருந்த பெரிய ஆல மரத்தடியில் கட்டிலை போட்டு படுத்து கொண்டே யோசித்தார் பணத்திற்கு என்ன பண்ணுவதென்று. அவர் மனதில் ஊர் கடைசியில் வாழும் மர வியாபாரி முருகனிடம் கேட்கலையே,  அவரிடம் பணம் கேட்டு பார்ப்போம் என்று அன்று சாயந்திரமே மரவியாபாரி வீட்டிற்கு சென்று தனது மூத்த மகளை கல்லூரியில் சேர்க்கும் விபரத்தை கூறி கடன் கேட்டார்.

அதற்கு, மரவியாபாரி என்கிட்ட பணம் இல்லை,  பணம் உனக்கு உடனே வேணும்னா ஒரு வழி இருக்கு, உன் வீட்டிற்கு முன்னாடி உள்ள அந்த  பெரிய ஆலமரத்தை என் கிட்ட விற்று விடு என பொடி வைத்து பேசினார்.

முதலில் கொடுக்க தயங்கினார் கோவிந்தன். ஏனெனில் அந்த மரம் தன் அப்பா காலத்தில் நட்டது. வெயில் காலத்தில் தான் அந்த ஆலமர நிழலில் கட்டிலை போட்டு உறங்கினதையும், தானும், தன் மகள்களும் சிறு வயதில் மரத்தை சுற்றி விளையாண்டதையும் நினைத்து பார்த்தார்.

என்னய்யா ரொம்ப யோசிக்கிற என்றார் மர வியாபாரி. ஒன்னுமில்லை, சரி அந்த ஆலமரம் எவ்வளவு விலைக்கு போகும்? என்று கேட்டார் ஆனந்தியின் அப்பா. அதற்கு அந்த மரவியாபாரி 15 ஆயிரத்துக்கு போகும், உனக்காக வேணும்னா நான் 17 ஆயிரமா  நாளைக்கே தர்ரேன் என்றார் மரவியபாரி. சரி நீயே அந்த மரத்தை வெட்டிக்கோ என்று கொடுக்க மனமில்லாமல் கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்.

மறு நாள் வியாபாரியிடம்  பணம் பெற்றுக் கொண்டு தன் மகள் ஆனந்தியை வேளாண்மை கல்லூரியில் சேர்த்து விட்டு  வரும் வழியில் நிறைய மரக்கன்றுகளை வாங்கி வந்தார்.

அந்த மரக்கன்றுகளை யெல்லாம் தனக்கிருந்த கொஞ்ச நிலத்தில் நட்டு  தண்ணீர் ஊற்றினார் மகிழ்ச்சியுடன்.  மனிதர்கள் தான் நமக்கு உதவவில்லை. ஆனால் இந்த‌மனிதன் (மரம்) ஆவது நமக்கு உதவியதே என்று மரத்தினை மனிதனாக நினைத்து பார்த்தார் அவர் மனதில்!.

கருத்து: இச்சிறுகதையில் மரத்தை வெட்ட வேண்டும் என்று கூறவில்லை. மரமிருந்தால் மனிதனுடைய அவசர தேவைக்கு உதவும் என்பதையும், மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதலே இச்சிறுகதையின் முக்கிய நோக்கமாகும்.


மரம் வளர்ப்போம்!                          மனித இனம் காப்போம்!                                                  

Tuesday, August 9, 2011

மழை - (சிறுகதை)



கண்டியங்கொல்லை என்ற அழகிய கிராமம். அங்கு ராசய்யா என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு வயது 60 வதை தாண்டினாலும் தன்னிடமிருந்த கால் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அவருடைய மகனும் மருமகளும் பேருந்து விபத்தில் இறந்து விட பேரனை தானே வளர்த்து வந்தார்.

ராசய்யா பெரியவரின்  பேரன் குமார் அவ்வூர் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். அன்று காலையில், ஏலே குமாரு பள்ளிகூடத்திற்கு கிளம்புடா மணி ஒன்பது ஆயிட்டுதுடா என்றார் அதட்டியவாரே. இதோ கிளம்பிட்டேன் தாத்தா என்று கூறிக்கொண்டே மஞ்சள் பையை தோலில் மாட்டிக்கொண்டு ஓடினான் பள்ளிக்கு.

ராசய்யாவிற்கு மனதில் ஆசை இந்த வருடமாவது பேரனுக்கு புது துணி எடுத்து தரணும் என்று. ஆனால் என்ன பண்ணுவது போன வருடம் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டதால்  இருந்த  கால் ஏக்கர் நிலமும்  பயிரிடாமல் தரிசாய் கிடந்தது. இந்த வருடமாவது சரியான நேரத்தில் மழைபெய்தால் வயலில் நெல் விதைத்து பேரனுக்கு புது துணி எடுத்து தரலாம் என்று மனசுக்குள்ளே நினைத்தார்.

நெல் விதைப்பிற்கான பருவருமும் நெருங்கியது. அவர் எதிர்பார்த்த மாதிரியே அன்று ஒருநாள் வானத்தில் மேகம் கருத்தது. வானத்தை தலையை தூக்கியவாறே பார்த்தார் அந்த பெரியவர். வானத்தில் கருமேகம் தரையை தொட்டுக்கொண்டு இருந்தது. அவர் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இன்று மழை கண்டிப்பாக பெய்யும் என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். அன்றிரவு நல்ல மழை பெய்தது.

மறுநாள் ஞாயிற்று கிழமை ஆனதால் பேரனையும் அழைத்துக்கொண்டு தோளில் ஏர் கலப்பையை சுமந்து கொண்டு, ஒரு கையில் ஒரு ஜோடி காளை மாடுகளை ஓட்டிச்சென்றார் அவருடைய வயலுக்கு. எரு இட்டு  நிலத்தை நன்கு உழுது பின்பு நெல்லை மானாவாரியாக விதைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அன்றொரு நாள் வீட்டில் குமார் தாத்தாவிடம்,  தாத்தா இந்த வருடமாவது எனக்கு புது சட்டை வாங்கி தா என்னுடைய கால்சட்டையில பின்னாடி ஓட்டை இருக்கிறதால என்னோடு படிக்கும் பசங்கயெல்லாம் காகிதத்தை (பேப்பரை) மடித்து  தபால் பெட்டி மாதிரி தபால் போட்டு சிரிக்கிறாங்க‌ என்றான் அழுதபடியே. 

சரிடா பேராண்டி இன்னும் 2 வாரத்தில் உனக்கு புது துணி எடுத்து தரேண்டா வயல்ல நெல் அறுவடைக்கு வந்துகிட்டு இருக்கு அறுவடை முடிந்ததும் நெல்லை விற்று உனக்கு புது துணி வாங்கி தருவதுதான் எனக்கு முதல் வேலை என்றார். அப்படியா! தாத்தா என்று தாத்தாவின் இடுப்பில் ஏறி கட்டிக்கொண்டான். சந்தோசமாக!

சில நாள் கழித்து நாளை அறுவடை செய்யலாம் என்று அறுவடைக்கு தேவையான கதிரறுக்கும் அருவாளை எடுத்து வைத்து கொண்டு படுத்தார் அந்த பெரியவர். அன்றிரவு விடியற்காலையில் அதிரடியாக புயல் மழை பெய்தது. மழை அத்தோடு விடாமல் தொடர்ந்து 3 நாளைக்கு பெய்ததால் வெள்ளத்தில் நெல்மணிகள் எல்லாம் அடித்து சென்றுவிட்டது. வயலை பார்த்த ராசையா போன வருடம் மழை பெய்யாமல் பொழப்பு கெட்டது. இந்த வருடம் அறுவடை நேரத்தில் மழை பெய்தே கெடுத்து விட்டது என மனம் நொந்து விட்டிற்கு சென்றார்.  

வீட்டில் பேரன் குமார் தாத்தாவிடம், தாத்தா தாத்தா எனக்கு புது துணி எடுத்து தர்ரேன்னு சொன்னீங்களே எப்ப தத்தா எடுத்து தருவீங்க என்றான் விவரம் புரியாதவனாய். 

பேராண்டி நேற்று வரை பெய்த மழையினால் நெல்மணிகள் எல்லாம் மழையில் அடித்து சென்றுவிட்டது. அடுத்த போகத்தில் (பட்டத்தில்) விளைச்சல் கிடைத்த உடன் உனக்கு கண்டிப்பாக புதுத்துணி எடுத்து தர்ரேன் என்றார் கண்ணீர் மல்க!  பேரனும் ம்..ம்... என்றான் கண்ணீரை துடைத்துக்கொண்டே…!   


Tuesday, August 2, 2011

குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்


அறிமுகம்
அறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம்  தான் இந்த குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால். இதற்கு முன்பு ஸ்காட்லான்டில் உள்ள ராஸ்லான்ட் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக குளோனிங் ஆடு (அ) படியாக்க ஆடு  டோலி  (Dolly) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் குளோனிங் பசு (அ) படியாக்கம் செய்த பசு 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சுசி  (Suzi) என்று பெயரிடப்பட்டது. இந்த குளோனிங் பசு சுசி யிலிருந்து கிடைக்கும் பால் மற்ற சாதாரண பசுக்களின் பாலைப் போல் இருந்தது.  இதற்கு பிறகு குளோனிங் மூலம்  பன்றி, எலி, பூனை மற்றும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு உருவாக்கப்பட்டது?
தற்போது  அர்ஜென்டினா விஞ்ஞானிகளால் உலகில் முதன் முறையாக  குளோனிங் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமமானது என கண்டறியப் பட்டுள்ளது. இந்த படியாக்கம் செய்த பசுவிற்கு (குளோனிங் பசு) ரோஸிட்டா ஐஎஸ்ஏ (Rosita ISA) என்று பெயரிடப்பட்டுள்ளது.  தாய்பாலில் உள்ள லாக்டோபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) எனும் இரண்டு புரதங்களை படியாக்கம் (குளோனிங்) தொழில்நுட்பம் மூலம் உட்செலுத்தி பெறப்பட்டதே இந்த குளோனிங் பசு ஆகும். மேலும் இந்த  லாக்டோபெரின் மற்றும் லைசோசைம் புரதங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு நோய் எதிர்பு திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய‌ ஆராய்ச்சியை அர்ஜென்டினைன் நிறுவனம் மற்றும்  சான் மார்டின் தேசிய பல்கலைக் கழகமும் இணைந்து  செய்துள்ளது.

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...