Monday, April 29, 2013

பிஸ்தா பருப்பின் பயன்கள்


அறிமுகம்

பிஸ்தாவின் தாவரவியல் பெயர் பிஸ்தாசியோ வீரா மற்றும் இது அனகார்டியேசியே குடும்பத்தை சார்ந்த தாவரம் ஆகும். சிறு மர வகையைச் சார்ந்த பிஸ்தாவானது, ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் தோன்றி, தற்போது சிரியா, லெபனான், துருக்கி, கிரீஸ்,இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பிஸ்தாவின் பயன்கள்

1. நோய் எதிர்ப்பு சக்தி
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
வைட்டமின்பி6ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு வைட்டமின் பி6 குறைவாக இருந்தால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைந்து எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது
2.அழகான தோல்
பிஸ்தாவில் வைட்டமின் “ஈ” மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது. மேலும் வைட்டமின் “ஈ” ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதிற்கும் உதவுகிறது.
3.ஆரோக்கியமான பார்வை
பிஸ்தா பருப்பில் சியாசாந்தின் (Zeaxanthin) மற்றும் லூட்டின் (Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின்விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய  நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கரோட்டினாய்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு என்னுடைய முந்தைய பதிவினை பார்க்கவும்.(இணைப்பு: http://ashokkumarkn.blogspot.ca/2012/07/blog-post.html).
4.நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
5.இருதய நோய் அபாயத்தை குறைத்தல்
பிஸ்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து (LDL - Low density lipoprotein) நல்ல கொழுப்பினை (HDL - High density lipoprotein) அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இது, மனிதனுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

தமிழர்களிடையே சண்டை சச்சரவு ஏற்படும் போது நீ பெரிய பிஸ்தாவா என்று சொல்லுவதை நாம் கேட்டிருப்போம். இந்த கட்டுரையின் மூலமாக   பிஸ்தாவின் முக்கியதுவத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும் இத்தகைய பல்வேறு பயனுள்ள மற்றும் ஊட்டச்சத்துகள் மிகுந்த பிஸ்தா பருப்பினை நாமும் உண்டு மகிழ்ந்து உடல் நலத்தையும் காப்போமே!

குறிப்பு: ஜீலை-2013, கலைக் கதிர் அறிவியல்இதழில் வெளியிட்டுள்ளேன். 

Sunday, April 14, 2013

நீரிழிவு நோயை குணப்படுத்தும் மூலிகைப் பயிர் - சிறுகுறிஞ்சான் (GYMNEMA)


அறிமுகம்:
தாவரவியல் பெயர்: ஜிம்னிமா சில்வஸ்டிரிஸ்
குடும்பம்அஸ்கிலிபிடேசியே

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படும் மூலிகைப் பயிரான சிறுகுறிஞ்சான் (Gymnema) பற்றி வளரும் தாவர வகையைச் சார்ந்தது. இப்பயிர் 1.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட இப்பயிர் பொதுவாக இந்தியாவின் காடுகளில் காணப்படுகிறது. மேலும் இப்பயிர் இந்தியாவில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராபஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இயற்கையாக காணப்படுவதுடன் தற்போது சிறிய அளவில் பயிரிடப்பட்டும் வருகிறது.

வேதிப்பொருட்கள்:
சிறுகுறிஞ்சானில் ஜிம்னிக் அமிலம், டார்டாரிக் அமிலம், பார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம், ஆந்தர குயினோன் மற்றும் ரெசின்கள் போன்ற வேதிப்பொருட்கள் இலைகளில் காணப்படுகிறது

 மருத்துவ பயன்கள்:


  • சிறுகுறிஞ்சான் மூலிகைப்பயிர் நவீன மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருத்துவ பொருளாக பயன்படுட்கிறது. இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறுகுறிஞ்சானை நம்முன்னோர்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.
  • சிறுகுறிஞ்சானில் உள்ள வேதிப்பொருள்கள் மனித உடலில் இன்சுலின் அளவை சரியான  விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • மனித சிறுநீரகத்திலிருந்து அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றவும் சிறுகுறிஞ்சான்  பயன்படுகிறது.
  • மேலும் மனிதனுக்கு ஏற்படும் ஜலதோசம், மலேரியா காய்ச்சல், மற்றும் செரிமான கோளாருகளை நிவர்த்தி செய்யும் மருத்துவ பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பு: நீரிழிவு நோயை குணப்படுத்தும் மற்றுமொரு தாவரமான இனிப்புத்துளசியை பற்றி தெரிந்து கொள்வதற்கு என்னுடைய பதிவினை பார்க்க பின்வரும் இணைப்பினுள் செல்லவும். http://ashokkumarkn.blogspot.ca/2011/07/diabetes-stevia.html

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...