Friday, November 18, 2011

உலகில் முதன் முதலாக துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய வேளாண் விஞ்ஞானிகள்


துவரை அறிமுகம்
இந்தியாவை தாயகமாக கொண்ட துவரை (Red gram or Pigeon pea) பயிரானது, இந்தியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயறு வகை பயிர்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறதுஇந்நாடுகளே 85 சதவிகிதத்திற்கும் அதிகமான துவரையினை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. துவரம் பருப்பானது  இந்திய உணவு வகைகளான தாள் (Dal) மற்றும் சாம்பார் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்  இப்பருப்பில் புரதங்கள் மற்றும்  வைட்டமின்கள்  போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பயிரின் இலைகள் மற்றும் உமிகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

துவரையில் மரபணு வரிசைப்படுத்துதல்
மரபணு வரிசை(Genome sequencing)  கண்டறியும்  ஆய்விற்கு 'ஆஷா' (ICPL87119) என்ற துவரை இரகம் பயன்படுத்தப்பட்டது. ஆஷா இரகத்தின் இலையிலிருந்து  உயர் தரமான  டி என் ஏ (DNA) பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த டி என் க்களை  மரபணு வரிசைபடுத்தும் இயந்திரத்தினுள் வைத்து  மரபணு வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் 511 Mb அளவுள்ள மரபணு வரிசை, 47,004 புரத குறியீட்டு மரபணுக்கள் (protein coding genes) மற்றும் 12,511 இடமாற்றக்கூடிய மூலகங்கள் (transposable elements) தொடர்புடைய மரபணுக்களை கண்டறிந்துள்ளனர்.  மேலும் இந்த ஆராய்ச்சியில் 1,213 நோய் எதிர்ப்பு திறனுடைய மரபணுக்கள் மற்றும்  உயிரற்ற அழுத்தத்தை (abiotic stress) தாங்கி வளரக்கூடிய 152 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். உயிர் தகவலியல்(Bioinformatics) மென்பொருள் BLAST  உதவியுடன்  துவரையின் புரத குறியீட்டு மரபணுக்களோடு சோயாபீன்ஸ் புரத குறியீட்டு மரபணுக்களை ஒப்பிட்டு செய்து பார்த்த போது இவ்விரண்டு பயிர்களுக்கிடையே 67.94 %  புரத குறியீட்டு மரபணுக்கள் ஒரே மாதிரி உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியினை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Agricultural Research Institute) உட்பட்ட தேசிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் (NRCPB-டெல்லி), பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்(வாரனாசி), இந்திய பயறு வகை ஆராய்சி நிறுவனம்(கான்பூர்), வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் (தார்வார்ட், கர்நாடகா), மற்றும் பஞ்சப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடம்(அகோலா, மகாராஷ்டிரா) விஞ்ஞானிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக உலகில் முதன்முதலில் துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளை நாமும் மனதார வாழ்த்துவோமே!
நன்றி: J. Plant Biochem. Biotechnol. (October, 2011), DOI 10.1007/s13562-011-0088-89.

குறிப்பு: இச்செய்தி வெளியிட தகவல்கள் தந்த நண்பர்கள் மற்றும் வேளாண் ஆராய்சியாளர்களான திரு. குமர குருபரன் மற்றும் முனைவர். கோவிந்தராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...