Monday, July 25, 2011

நீரிழிவு நோய் - Diabetes


அறிமுகம்:
இன்றைய அவசர உலகில்  மனிதன் பல்வேறு நோய்களோடு இருந்து கொண்டு உணவே மருந்து என்ற காலம் போய் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்பது வருத்தத்திற்குறியதே. இந்தியாவில் தற்போது மிக முக்கியமான நோயானது நீரிழிவு நோய் (Diabetes) என்றழைக்கப்படும் சர்க்கரை நோயே ஆகும். ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது, உலக நீரிழிவு நோய் நிறுவனத்தின்  2009ஆம் ஆண்டு அறிக்கையின் படி சுமார் 50.8 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சீனா (43.2 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (26.8 மில்லியன்) நோயாளிகள்  நீரிழிவு நோயுடன் உள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில்  நீரிழிவு நோயின் தலைநகராக விளங்கும். அதாவது, இந்திய மக்கள் தொகையில் 9 சதவிகதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று உலக நீரிழிவு நோய் நிறுவன அமைப்பு (International Diabetes Federation- IDF) கூறுகிறது.
என்ன நண்பர்களே.. தற்போது நீங்கள் நீரிழிவு நோய் மக்களிடையே எந்த அளவில் உள்ளதென அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு நோய் எனப்படுகிறது. அதாவது மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் என்ற நொதி அவசியமாகிறது.  இந்த இன்சுலின் நொதி சரியாக செயல் படவில்லை எனில் இரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு இரத்தம் சரிவர செல்லாமல் இருதயத்தில் அடைப்பு போன்றவைகள் வருவதற்கு காரணமாகிறது.

நீரிழிவு நோயின் வகைகள்::::
நீரிழிவு நோயானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் நீரிழிவு நோயானது முதல் வகை நீரிழிவு (டைப் 1 டையபடிஸ்) ஆகும். சுமார் 5- 10 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகள் இந்த முதல் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் நொதியானது முற்றிலும் சுரக்காமல் அல்லது உற்பத்தி ஆகாமல் உள்ளதே ஆகும். இவர்கள் வாழ்வதற்கு செயற்கையாக இன்சுலினை கொடுத்தே ஆக வேண்டும்.

நீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 டையபடிஸ் எனப்படும் இரண்டாவது வகையே ஆகும்இது 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் வரும் நீரிழிவு நோயாகும். அதாவது, இதை பெரும்பாலும் வயாதானவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் என்று கூறுவார்கள். இந்த வகை நீரிழிவு நோயானது  90-95 சதவிகித  நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்சுலின் நொதி போதிய அளவு உற்பத்தியாகமல் உள்ளதும்,  உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த வகையானது பெற்றோர்களிடமிருந்து அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்த டைப் 2 வகை பாதிப்பை கொண்டவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளது. இந்நோயாளிகள் உடற் பயிற்சி, உடல் பருமனை குறைத்தல் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் இந்த நீரிழிவு வகையை ஓரளவு கட்டுபடுத்த முடியும்.

மூன்றாவது வகை நீரிழிவானது (டைப் 3 டையபடிஸ்) பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயாகும். அதாவது, பெண்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு தனது இரத்தத்தில் அதிகமான சர்கரையின் அளவை (High blood sugar). கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் கர்ப காலத்தில் இரத்ததில் அதிக சர்க்கரை அளவை (உயர் இரத்த சர்க்கரை- High blood sugar) கொண்டிருப்பார்கள். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்ப காலத்தில் தேவைக்கு அதிகமான இன்சுலின் சுரக்காமல் போனதே இந்த  உயர் இரத்த சர்க்கரைக்கு காரணம். பொதுவாக இந்த  நீரிழிவு வகை குழந்தை பிறந்த பின்பு மறைந்துவிடுகிறது.

என்ன உணவு உண்ணலாம்?

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன உணவு வகைகளை உண்ணலாம் என்பதை அறிய  வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தினகரன் நாளிதழின் இணைய இணைப்பை (லிங்கை) பார்க்கவும்.

குறிப்பு: : நீரிழிவு நோயை பற்றி நன்கு எழுதுவதற்கு நான் மருத்துவன் அல்ல. ஆதலால் என்னால் இயன்ற அளவு  தமிழில் தொகுத்தெழுதியுள்ளேன். நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (ஸ்டிவியா- Stevia) முக்கியத்துவம் என்ன என்பதை எனது அடுத்த பதிவில் காண்போம். நன்றி.

அறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம்! அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்!
குறிப்பு: 2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.

1 comment:

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...